திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கீழ்த்தரமான அரசியல்வாதி போல நடந்துகொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே; தேர்தல் களத்தில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு மோடி அச்சமடைந்து இருப்பதாகவும் அதனாலேயே காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதாகவும் கூறினார்.
இந்தியாவை எப்படி ஒற்றுமையாக வைத்திருப்பது என தெரிந்துகொள்ள வரலாற்றை மோடி படிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், பாஜகவின் வாக்குறுதிகளில் ஒன்றை கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டே 400க்கும் அதிகமான எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
“கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவர் எப்போதும் காங்கிரசை விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை என கூறிவரும் அவர், பிறகு எதற்காக எங்கள் கட்சியை பற்றி கவலைப்பட வேண்டும்? வெற்றிபெறுவோம் என பாஜவுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், எதற்காக ஊழல்வாதிகளை கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று அவர் கேட்டார்.
“நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவதாக மோடி கூறினார்; காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவேன் என்றார். அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறினார்.
“தற்போது மோடியின் உத்தரவாதம் என பேசி வருகிறார். தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் உத்தரவாதம்,” என்று கார்கே குறிப்பிட்டார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள காணொளியில், “பாஜக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இதுவரை தேசத்துக்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்? தேசிய இயக்கத்தில் கூட பங்கேற்கவில்லை. தேர்தலுக்காக, தாலி பாதுகாப்பாக இருக்காது என்று மக்களிடம் மோடி பொய் சொல்கிறார். இந்த நாட்டை 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஒருமுறையாவது இப்படி நடந்திருக்கிறதா?
“1962 போரின்போது இந்திரா காந்தி தன்னுடைய நகைகளை நன்கொடையாக வழங்கினார். சுதந்திர இயக்கத்துக்காக மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் அலகாபாத்தில் உள்ள தங்கள் வீட்டை நன்கொடையாக வழங்கினர். நமது தலைவர்கள் வாழ்ந்து, தேசத்துக்காக தங்கள் உயிரை, ரத்தத்தை தியாகம் செய்துள்ளனர்” என்று கார்கே தெரிவித்தார்.