அயலகத் தமிழர் தினக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் முன்னணித் தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
சிங்கப்பூர் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்தின் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ் இலக்கியத் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக சிங்கப்பூரின் புகழ்பெற்ற பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்குக் ‘கணியன் பூங்குன்றனார்’ விருது வழங்கிச் சிறப்பித்தார்.
“தமிழ் மண்ணில் இந்தத் தமிழ் விருதை வாங்கியதில் பேருவகை அடைகிறேன். என் இத்தனை காலச் சேவைக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரமாக இதனைக் கருதுகிறேன்,” என்றார் பேராசிரியர் திண்ணப்பன்.
அயலகத் தமிழர் தினத்தின் தொடக்கத்திலிருந்து ஆண்டுதோறும் மூன்று அயலகத் தமிழர்களுக்கு இலக்கியம், இலக்கணம், அறிவியல் ஆகிய துறைகளில் அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 லட்ச ரூபாய் காசோலையும் தகுதிச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
அவ்வகையில், இவ்வாண்டு அயலகத் தமிழர் தினத்தில் இலக்கிய விருது 2022ஐ கவிமாலைக் காப்பாளர் மா. அன்பழகனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
“சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் மற்ற நாட்டு இலக்கியங்களுக்கு எவ்விதத்திலும் குறைவானது இல்லை என்பதை எனக்குக் கிடைத்த இவ்விருது எடுத்துக்காட்டுகிறது. இவ்விருதினால் எனக்கு மட்டும் பெருமையன்று, சிங்கப்பூர்வாழ் தமிழ் இலக்கியத்திற்கே பெருமை,” என்றார் எழுத்தாளர் அன்பழகன்.
‘மக்கள் மனம்’ திங்களிதழ் ஆசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைத் தலைவி இன்பா, பிரபல கவிஞர்களும் எழுத்தாளர்களுமான தாயுமானவன் மதிக்குமார், மில்லத் அஹமது, முனைவர் ராம் ஆகியோரின் நூல்களும் தமிழக அமைச்சர்களின் முன்னிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக வெளியிடப்பட்டன.
கவிஞர் இறை.மதியழகன், ‘சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை’ என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலையில் எட்டு நிமிடக் கவிதை வாசித்தார்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் தனபால் குமார் ‘அயலகத் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல்’ அமர்வில் உரையாற்றினார்.
சிங்கப்பூரின் இருமொழிக் கல்வி, நமது தாய்மொழிகளை வாழும் மொழிகளாக வைத்திருப்பதில் நாம் காட்டும் முனைப்பு, தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் சமூகத்தின் ஈடுபாடு, அரசாங்க ஆதரவு மற்றும் தமிழாசிரியர் சங்கம் 1992ஆம் ஆண்டுமுதல் நடத்திவரும் உலகத் தமிழாசிரியர் மாநாடுகள் குறித்து அவர் பேசினார்.
இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் ஆர். ராஜாராம், தமிழைக் கட்டிக்காக்க அமைக்கப்பட்ட வளர்தமிழ் இயக்கம், 40 - 50 பங்காளித்துவ தமிழ், இந்திய அமைப்புகளோடும் அரசாங்கத்தோடும் நடத்தும் தமிழ்மொழி விழா, தமிழ் இளையர் விழா போன்றவற்றை நடத்தி வருவதைக் குறிப்பிட்டார்.