தமிழ்நாட்டையும் சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளையும் பொருளியல், பண்பாட்டு ரீதியாக மேலும் இணைக்கும் வகையில் ஜனவரி 7 முதல் பல்வேறு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சிங்கப்பூரர்கள் இன்றியமையாத பங்காற்றி வருகின்றனர்.
ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாட்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் மனிதவள அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு, ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’, சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம், சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை, சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
‘கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மண்ட்’, ‘எஸ்டி டெலிமீடியா’ உலகத் தரவு மையங்கள், ‘கிரெயான்’ தரவு, ‘லயன்ஸ்பாட் இந்தியா’ முதலிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மொத்தம் S$5 பில்லியன் அளவிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டன.
‘புளூ ஓஷன்’, ‘டிபிஎஸ்’ வங்கி, ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’, ‘லயன்ஸ்பாட்’ போன்ற சிங்கப்பூர் அமைப்புகளின் சாவடிகளும் சிங்கப்பூருக்கென ஒதுக்கப்பட்ட காட்சிக்கூடத்தில் இடம்பெற்றன.
“இங்கு பல தொழில்முனைவுகளும் தங்கள் புத்தாக்கத் தொழில்நுட்பங்களை பொதுமக்களிடம் காட்சிப்படுத்தின,” என்றார் 20 தொழிலதிபர்களை வழிநடத்திச் சென்ற சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபையின் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு.
சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபை, வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ‘ஃபர்ஸ்ட் வோர்ல்ட் கம்யூனிட்டி’யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.
பத்தாவது உலகத் தமிழர் பொருளியல் மாநாட்டில் சிங்கப்பூரர்களுக்கு அங்கீகாரம்
உலகத் தமிழர்களின் சமூக, பொருளியல் ரீதியான மேம்பாட்டிற்கு முக்கியப் பங்காற்றியுள்ள சிங்கப்பூரர்கள், தமிழ்நாட்டின் பொருளியல் மாநாடுகளுக்கு அழைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டனர்.
ஜனவரி 9, 10ஆம் தேதிகளில் சென்னை லா ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழர் பொருளியல் மாநாடு 2024 மற்றும் உலகப் பொருளியல் உச்சநிலை மாநாட்டின்போது ‘உலகத் தமிழர் மாமணி’ விருது பெற்றார் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன்.
உலகத் தமிழர்களின் நலனுக்கும் சமூக, பொருளியல் மேம்பாட்டிற்கும் சிறப்பாகப் பணியாற்றிவரும் 12 தமிழர்களுக்கு இந்தப் பன்னாட்டு விருது வழங்கப்பட்டது.
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத் தலைவராக திரு ஹரிகிருஷ்ணன், 1998லிருந்து திருக்குறள் விழா, பாரதியார் விழா என தமிழ்த் திறனை மேம்படுத்தும் போட்டிகளை நடத்தியுள்ளார். அவர் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
21 ஆண்டுகளாக ‘டோஸ்ட்மாஸ்டர்ஸ்’ அமைப்பின் மூலம் தமிழர்களின் பேச்சுத்திறனை வளர்க்கவும் உதவியுள்ளார். 2015லிருந்து கோப்பியோ சிங்கப்பூர் தலைவராகவும் வர்த்தகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
மாநாட்டில் நடைபெற்ற அமர்வுகள் ஒன்றில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ரவீந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
“அனைத்துலக வர்த்தக சட்டதிட்டங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். இந்தியாவிற்கும் ஆசியானிற்கும் இடையே உள்ளதைப் போன்று இலவச வர்த்தக ஒப்பந்தங்களினால் கிடைக்கக்கூடிய சலுகைகளை அறிந்துகொள்ளவேண்டும்.
“எந்த நாட்டில் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்குமோ அங்குபோய் வர்த்தகம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் விரைவில் தீர்வுகாண முடியும்,” என்ற கருத்துகளை அவர் முன்வைத்தார்.