காற்பந்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்), மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி), ஸ்டார்ஹப்புடன் இணைந்து, பிப்ரவரி 3ஆம் தேதியன்று 7 முதல் 13 வயதிலான வசதிகுறைந்த சிறுவர்களுக்குக் காற்பந்துப் பயிற்சி வழங்கியது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களான வெஸ்ட் ஹேம் யுனைடட், பர்ன்லீ பயிற்றுவிப்பாளர்கள் அதனை வழிநடத்தினர்.
கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், சிறுவர்களை ஊக்குவிக்க சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார், ஐந்து முறை பிரிமியர் லீக் பட்டம் வென்ற பீட்டர் ஷுமைக்கல். மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயர் டென்னிஸ் புவாவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிரிமியர் லீக், சிங்கப்பூரில் திறந்துள்ள முதல் அனைத்துலக அலுவலகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சி, வசதிகுறைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘ஜூனியர் ஸ்டார்ஸ்’ திட்டத்தின்கீழ் நடைபெற்றது.
இத்திட்டத்திற்கு பள்ளிகளும் சமூக அமைப்புகளும் மாணவர்களை PA_CentralSingapore@pa.gov.sg என்ற மின்னஞ்சலில் முன்மொழியலாம்.
மேல்விவரங்களுக்கு https://centralsingapore.cdc.gov.sg/programmes/lifelong-learning/nurtur… இணையத்தளத்தை நாடலாம்.
இபிஎல்லை நோக்கிய பயணத்தில் பீட்டரின் அறிவுரை
“இங்கிலிஷ் பிரிமியர் லீக் மிகவும் கடுமையான போட்டிக்களம். அதில் போட்டியிட சிங்கப்பூர் விளையாட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடும் அனுபவமும் தலைசிறந்த ஆதரவும் தேவை. அவர்கள் கல்வியில் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கலாம்,” என்றார் ஷுமைக்கல்.
பிரிமியர் லீக்கைப் பொறுத்தவரையில் ஆசிய விளையாட்டாளர்களை வரவேற்பதாகக் கூறினார் ஷுமைக்கல்.
“ஆசிய விளையாட்டாளர்கள் போட்டியின் தரத்தை மேலும் உயர்த்துகின்றனர், ” என்றார் அவர்.
சிங்கப்பூரின் புதிய தேசிய காற்பந்துப் பயிற்றுவிப்பாளரின்கீழ் சிங்கப்பூர் அணி பல வெற்றிகளைக் குவிக்கவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.