இலங்கையின் 76ஆவது தேசிய தினம் சிங்கப்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர், தொழில், சமூகப் பேராளர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட அக்கொண்டாட்ட நிகழ்வைக் குத்துவிளக்கேற்றிச் சிறப்பித்தோரில் 66 வயது போக்கலே போடிஹமியும் ஒருவர்.
கடந்த 1991 முதல் 32 ஆண்டுகளாக இல்லப் பணிப்பெண்ணாக ஒரே வீட்டில் பணியாற்றி திருவாட்டி போக்கலேயின் உழைப்பைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கைத் தூதரகத்தினர் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
இலங்கையின் காலி என்ற ஊரைச் சேர்ந்த திருவாட்டி போக்கலேக்கு 41 வயது மகன் உள்ளார். தம் முதலாளியின் பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக பணியில் அமர்த்தப்பட்ட இவர், விரும்பியே அக்குடும்பத்தைப் பல காலம் முழுமனத்துடன் பார்த்துக்கொண்டதாகக் கூறினார்.
செவ்ரோன்ஸ் மன்ற அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) காலை நடைபெற்ற இந்த தேசிய தினக் கொண்டாட்டத்தில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றனர். புத்த பிக்குகள், செண்பக விநாயகர் கோயில் சிவாச்சாரியர்கள், இஸ்லாமிய போதகர்கள், கத்தோலிக்கப் பாதிரியார்கள் என பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.
நாட்டுக்காக உயிர் துறந்தவர்களுக்கு முதலில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் நெறியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் இலங்கையின் தேசிய கீதம் அவ்விரு மொழிகளிலும் பாடப்பட்டிருந்தன.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயின் சுதந்திர தின உரையை சிங்கப்பூருக்கான இலங்கை தூதர் சேனரத் திஸநாயகே வாசித்தார். மேலும், இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனே மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் வாழ்த்துரைகளும் அரங்கில் வாசிக்கப்பட்டன.
இத்தகைய மாண்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியில் விளக்கேற்றும் வாய்ப்பு கிட்டியது குறித்து நெகிழ்வதாகக் கூறினார் திருவாட்டி போக்கலே.
“சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்,” என்று அவர் சொன்னார்.
திருவாட்டி போக்கலே சிங்கள இனத்தவர் என்றாலும் தமிழிலிலும் பேசுகிறார்.
“இலங்கையில் தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தினரும் எனக்கு நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அந்த நெருக்கமே என்னைத் தமிழில் பேச வைத்தது,” என்றார்.
பல சமூகங்களைப் பிரதிநிதித்து, நல்லிணக்கத்தை வளர்க்கும் இந்நிகழ்ச்சியைப் பாராட்டுவதாக பார்வையாளர்களில் ஒருவரான திருவாட்டி சுஷிதா மனோகரன் கூறினார். குத்துவிளக்கேற்ற மூத்தப் பணிப்பெண்ணை அழைத்தது தாம் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் காணாத சிறப்பு என்றும் சிங்கப்பூர் சிலோன் தமிழர் சங்கத்தில் கடந்த 16 ஆண்டுகளாக சமூக, கலாசாரத் தலைவராக உள்ள திருவாட்டி சுஷிதா சொன்னார்.