சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி மார்ச் 24ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சிங்கப்பூருக்கான குவைத் தூதரும் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் புரவலருமான ஹாஜி ஜைனுல் ஆபிதீன் ரஷீத், புரவலர் சிங்கப்பூர் சீதக்காதி ஹாஜி எஸ்.எம்.அப்துல் ஜலீல், சிங்கப்பூருக்கான அல்ஜீரியத் தூதர் அலாமி மூஸா, முயிஸ் தலைமை நிர்வாகி காதிர் மைதீன், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி இரா.அன்பரசு, நாடாளுமன்ற நியமன முன்னாள் உறுப்பினர்கள் இரா.தினகரன், முஹம்மது இர்ஷாத், இந்திய மரபுடைமை நிலைய, நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடமை நிலைய, ஜாமியா சிங்கப்பூர், ஶ்ரீ நாராயண மிஷன், இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர்கள், தமிழர் பேரவையினர், அடித்தளத் தலைவர்கள், இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பினர், புரவலர்கள், தொண்டூழியர்கள் என ஏறத்தாழ 180 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக குமாரி உம்மு உமாரா திருக்குர்ஆன் வசனங்களை ஓதி அதன் தமிழ் மொழியாக்கத்தை வாசித்தார். நோன்பின் மாண்பு குறித்தும் நோன்பு நோற்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் அப்துல் கஃபூர் பள்ளிவாசல் தலைமை இமாம் அஜீஸுல்லாஹ் ஹஸனி, தமிழ்மாமணி இரா.தினகரன் ஆகியோர் பேசினர்.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் ஹாஜி முஹம்மது பிலால், ஆதரவாளர்கள், பங்காளிகள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அன்றைய தினத்தில் இந்து ஆலயங்களில் பங்குனி உத்திரத் திருவிழா, தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றபோதிலும் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளில் சமயம், இனம், மொழி கடந்து பலர் தம் அழைப்பை ஏற்று கலந்து சிறப்பித்ததை முஹம்மது பிலால் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் நல்லிணக்கம் தழைத்தோங்க வழிபாட்டுத் தலங்களும் அமைப்புகளும் பெரும்பங்காற்றி வருவதைக் குறிப்பிட்டு பாராட்டியதோடு நல்லிணக்கம் தொடர்ந்து கட்டிக்காக்கப்பட வேண்டும் என துணை அமைச்சர் ஆல்வின் டான் வேண்டுகோள் விடுத்தார்.
பென்கூலன் பள்ளிவாசல் இமாம் கலீல் அஹமது ஹஸனியின் துஆவுடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நிறைவை நாடியது.