சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) சார்பில் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்வு மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பென்கூலன் பள்ளிவாசலின் மூன்றாம் தளத்திலுள்ள பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு சங்கத்தின் இணைச் செயலாளர் ஜனாப் எஸ். செய்யது முபாரக் அவர்களின் புதல்வி எஸ். சபீராவின் கிரா அத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. சங்கத்தின் தலைவர் ஜனாப் ஒய்.எஸ். செய்யது யூசுப் தலைமை உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் முன்னாள் உஸ்தாத் மற்றும் பென்கூலன் பள்ளிவாசலின் இமாம் ஏ. சேக் அலி பாகவி மற்றும் மதரசா TMASன் உஸ்தாத் மௌலானா மௌலவி ஹாபீஸ் முகமது இஸ்மாயில் மன்பஈ அவர்களால் நோன்பின் மாண்பைப் போற்றும் மார்க்க சொற்பொழிவும் துவாவும் நடைபெற்றது.
இரவு 7.15 மணியளவில் துவாவுடன் அனைவரும் நோன்பு துறந்தனர். இ.எம். சாஹித் நிஜாமின் பாங்குக்குப் பின் அறுசுவை உணவுப் பதார்த்தங்கள் வழங்கப்பட்டன.
இறுதியாக இணைச் செயலாளர் ஜனாப் எஸ். செய்யது முபாரக் நன்றியுரை ஆற்றினார். சங்கத்தின் செயலாளர் ஜனாப் இ.எம். சாகுல் ஹமீது இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.