உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஞாயிறு (ஏப்ரல் 14) காலை 10 முதல் 11.30 மணி வரை மீனாட்சி எனும் பரதநாட்டிய நாடகம் அரங்கேறியது.
சர்வா நுண்கலைகள் மன்றம் சிங்கப்பூர் வழங்கிய இப்படைப்பு, தமிழ்ப் புத்தாண்டன்று, வீரத்திற்குப் பெயர்போன மீனாட்சியின் வாழ்வை சித்திரித்தது.
முதல் காட்சியில் மதுரையின் பாரம்பரியம் காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறுவயதில் மீனாட்சி கற்ற கலைகள் (வாள் வீச்சு, வில்லில் அம்பெய்தல், இசை, குதிரை சவாரி) நாட்டியமாக சித்திரிக்கப்பட்டது.
இளம் வயதில் விதைத்த வீரத்தினால், மீனாட்சி வளர்ந்ததும் போர் வீராங்கனையாகவே உருமாறினார். எதிரிகளை வீழ்த்தினார். புதிய பொறுப்புகளை ஏற்று ராணியாக ஆட்சி புரிந்தார். மீனாட்சியின் திருமணத்துடன் நாடகம் ஒரு மங்கலகரமான நிறைவை நாடியது.
சர்வா நுண்கலைகள் மன்றத்தின் 700 மாணவர்களில் 100 நடனமணிகள் இந்நாடகத்தைப் படைத்தனர்.
மதுரை மீனாட்சியின் வீரம், இன்றைய பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களைக் குறிப்பதாகவும் கூறப்பட்டது.
“நுண்கலைகள், தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமானவை. ஆண்களுக்கு நிகராக, அதற்கும் மேலாக, பெண்களுக்கு அத்தனை கலைகளையும் கற்றுத் தரவேண்டும் என்பதை நாடகம் உணர்த்தியது,” என்றார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகையளித்த நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் ரா.தினகரன்.
“குடும்பத்திற்காகத் தங்களது வாழ்வைத் தியாகம் செய்யும் பெண்களை வீட்டிலேயே முடக்கிவிடாமல், அவர்களது திறன்களை வெளிக்கொணரவேண்டும் என்பதும் இந்நாடகத்தின் படிப்பினை,” என்றும் அவர் கூறினார்.
“இந்நாடகத்திற்கான பயிற்சிகள் இவ்வாண்டு ஜனவரியில் தொடங்கின,” என்றார் சர்வா நுண்கலைகள் மன்றத்தின் நிறுவனரும் பரதநாட்டியம், கதக் நடன நிபுணருமான ஷைலு வின்ஸ்டன்.
“இயல், இசை, நாடகமான முத்தமிழ் இங்குள்ளது. கலை மூலமாகத்தான் மொழியை வளர்க்க முடியும்,” என்றார் தம் பள்ளி மாணவியின் நடனத்தைக் காணவந்த முனைவர் மீனாட்சி சபாபதி.
“பல வார உழைப்பின் பலனான இந்த நாடகம் மிகவும் சுவாரசியமாக இருந்தது,” என்றார் ஈராண்டுகளாக நடனம் கற்றுவரும் தம் இரு மகள்களின் படைப்பைக் கண்டு பூரித்த தந்தை விஜய் குமார் வஜ்ஜா, 45.