பெண்களை மானபங்கப்படுத்தியதாக 11 சந்தேகப் பேர்வழிகள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
மானபங்கம் செய்யப்பட்ட பெண்களில் ஒன்பது முதல் 14 வயதிற்குட்பட்ட இரு சிறுமியரும் அடங்குவர்.
அந்த 11 ஆடவர்களும் கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் அக்குற்றச் செயல்களைப் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
அவர்கள் 21 முதல் 67 வயதிற்குட்பட்டவர்கள்.
அவர்களில் ஆக வயதானவரான 67 வயது ஆடவர், 2023 ஏப்ரல் 7ஆம் தேதி பூகிஸ் ஸ்திரீட்டில் 14 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர் மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
தெம்பனிஸ் குடியிருப்புப் பேட்டையில் சென்ற ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி 24 வயது ஆடவர் ஒருவர், ஒன்பது வயதுச் சிறுமியை மானபங்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்பில் ஐந்து நாள்களுக்குப் பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார். 14 வயதிற்குட்பட்டவரை மானபங்கம் செய்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி, ஆர்ச்சர்ட் சாலையில் 48 வயது ஆடவர் ஒருவர், மூன்று பெண்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அப்பெண்களில் ஆக இளையவரின் வயது 18; ஆக மூத்தவரின் வயது 40.
அவர்களுடன், 20 வயதுப் பெண்ணின் பின்புறத்தையும் அவர் தள்ளியதாகச் சொல்லப்படுகிறது. அதே நாளில் கைதுசெய்யப்பட்ட அந்த ஆடவர், நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
கடந்த 2021, 2022 ஆண்டுகளில் மானபங்கப் புகார்கள் அதிகரித்தன. 2021ஆம் ஆண்டில் 1,474 மானபங்கப் புகார்கள் வந்த நிலையில், 2022ல் அந்த எண்ணிக்கை 9% கூடி, 1,610 ஆனது.
2023ஆம் ஆண்டு பதிவான மானபங்கப் புகார்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.