சிங்கப்பூரில் பிரசவத்தின்போது வெளியாகும் நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் சேவையை வழங்கும் ‘கார்டுலைஃப் குரூப் லிமிடெட்’ நிறுவனத்தின் பங்குகளின் விலை டிசம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை 40 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்தன.
அந்நிறுவனத்தின் ரத்த வங்கியில் குருத்தணு (ஸ்டெம் செல்) சிகிச்சைக்காக சேமிக்கப்பட்ட ரத்தம் உகந்த வெப்பநிலையில் பராமரிக்கப்படாததால் பாழாயின. இதனால் குறைந்தது 2,150 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இத்தகவலை வியாழக்கிழமை (நவம்பர் 30) சுகாதார அமைச்சு வெளியிட்டது.
மேலும் நஞ்சுக்கொடி ரத்தம், தொப்புள்கொடி ரத்தம், மனித உடல் திசுக்களைச் சேகரித்தல் ஆகிய சேவைகளை நிறுத்தும்படி ‘சிஜிஎல்’ நிறுவனத்திற்கு அமைச்சு உத்தரவிட்டது.
நோயாளிகளிடம் புதிதாக எந்த வகையான சோதனைகளை மேற்கொள்ளவும் ஆறு மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளிக்க நிறுவனத்திற்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.
அந்நிறுவனப் பங்குகளின் விலைச் சரிவுக்கு இவை அனைத்தும் முக்கியக் காரணங்களாக கருதப்படுகின்றன.
வியாழக்கிழமை 45.5 காசாக முடிவடைந்த அந்நிறுவனப் பங்கின் விலை, வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி 27 காசாகச் சரிந்தது. இது வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது 40.7 விழுக்காடு குறைவு.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, வெள்ளிக்கிழமை ‘கார்டுலைப்’ நிறுவனப் பங்கின் தொடக்க விலை 16 காசாக இருந்தது. பின்னர் அது மீண்டு 26 காசுக்கு உயர்ந்தது. இறுதியில் 31 காசுக்கு முடிவடைந்தது. முந்தைய நாள் முடிவோடு ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 32 விழுக்காடு குறைவு.
கடைசியாக 2023 மார்ச் 31ஆம் தேதி, அந்நிறுவனப் பங்குகள் இந்த விலைக்கு விற்கப்பட்டன.
கிட்டத்தட்ட 593,000 பங்குகள் கைமாறின. இது பங்குவணிகச் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றாலும் நவம்பர் 30ஆம் தேதியன்று 21,000 பங்குகள் மட்டுமே கைமாறியது குறிப்பிடத்தக்கது.