அங் மோ கியோ ஹப்பில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி, முதிய தம்பதியர் தங்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வேறு இடத்தில் நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்தச் சாதனங்கள் ஆபத்து விளைவிக்கும் விதத்தில் நிறுத்தப்பட்டிருந்ததே அதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், உட்புற இடங்களில் அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்தன.
இதையடுத்து, தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரைத் தங்கள் கடைத்தொகுதிகளில் அனுமதிப்பதாக ‘கேப்பிடலேண்ட்’, ‘லெண்ட்லீஸ்’, ‘ஃபிரேசர்ஸ் புரோப்பர்ட்டி’, ‘லிங்க் ரீட்’ ஆகியவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.
பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய பொருள் வாங்கும் அனுபவங்களை வழங்குவது அவற்றின் நோக்கம்.
நடமாடும் ஸ்கூட்டர், மின்சக்கரநாற்காலி ஆகியவை தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் அடங்கும். நடப்பதற்குச் சிரமப்படுவோருக்கு அவை பயன்படுகின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையம், வெளிப்புற நடைபாதைகளில் நடமாட்டச் சாதனங்களின் பயன்பாட்டுக்கு விதிமுறைகளை வகுத்தாலும், உட்புற இடங்கள் அதன்கீழ் வருவதில்லை. சொத்து உரிமையாளர்களே அதற்கான விதிமுறைகளை நிர்ணயிப்பார்கள்.
கடைத்தொகுதிகள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களையும் ஓட்டுநர்களையும் வரவேற்கும் நிலையில், வாடிக்கையாளர்கள் சிலர் பாதுகாப்புக் காரணங்களால் அதன் தொடர்பில் அக்கறை எழுப்பியுள்ளனர்.
உட்புற இடங்களில் அச்சாதனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
துடிப்புமிக்க நடமாட்டச் சட்டத்தின்கீழ், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் வெளிப்புறப் பாதைகளில் அதிகபட்சமாக 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லமுடியும். இருப்பினும், உட்புற இடங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக்கென எந்த விதிமுறையும் இல்லை.