போதைப்பொருள் குற்றங்கள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட 28 வயது ஆடவர் பீஷானில் புதன்கிழமை (ஜூலை 5) கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கிட்டத்தட்ட $173,000 மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
கைது நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரி ஒருவர் லேசாகக் காயமடைந்ததாகக் காவல்துறையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்தது.
பீஷானின் ஜாலான் பின்ச்சாங்கில் உள்ள ஒரு வீட்டில் உதவி தேவைப்படுவதாக அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மாலை 6.40 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.
“அந்த ஆடவர் கைது செய்யப்படுவதைத் தடுக்க கடுமையாகப் போராடினார். அவரை அடக்குவதற்குத் தேவையான பலம் பயன்படுத்தப்பட்டது,” என அறிக்கை குறிப்பிட்டது.
காவல்துறை அதிகாரிகள் வீட்டைச் சோதனையிட்டபோது ஏறக்குறைய 450 கிராம் ஐஸ், 2,229 கிராம் கஞ்சா, 258 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 81 எரிமின்-5 மாத்திரைகள், 89 எல்எஸ்டி வில்லைகள் உட்பட இதர போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $173,000.
கைப்பற்றப்பட்ட ஐஸ், கஞ்சா இரண்டும் ஒரு வாரத்திற்குக் கிட்டத்தட்ட 580 போதைப்புழங்கிகளின் பயன்பாட்டிற்குப் போதுமானவை.
கைதான ஆடவர்மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.