2023 எஃப்1 கார் பந்தயத்தை நேரில் காண வருவோர் எண்ணிக்கை 17 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரினா பே மிதக்கும் மேடையை மறுசீரமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பே கிராண்ட்ஸ்டேண்ட் மூடப்படுவதே இதற்குக் காரணம் என ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
செப்டம்பர் 15 முதல் 17ஆம் தேதிவரை நடைபெறும் இரவுநேர கார் பந்தயம் ஏறக்குறைய 250,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டின் பந்தயம் சாதனை அளவாக 302,000 பேரை ஈர்த்தது.
எஃப்1 பந்தயத்துக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் வேளையில், ஏற்பாட்டுப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நுழைவுச்சீட்டுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 பிரிவுகளில் 16 பிரிவுகளில் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. எஞ்சிய பிரிவுகளில் ஐந்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே நுழைவுச்சீட்டுகள் உள்ளன.
பந்தயம் நடைபெறும் மரினா பே பகுதிக்கு அருகே உள்ள ஹோட்டல்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலேயே முன்பதிவுகள் கிடைக்கத் தொடங்கிவிட்டன.