சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘டுகெதர் இன் சிங்கப்பூர்’ நிகழ்ச்சி, இம்மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் நடந்த அந்த விருந்து நிகழ்ச்சியில் அவ்வட்டாரத்திலுள்ள விடுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஊழியர்களும் 100 தொண்டூழியர்களும் இணைந்தனர்.
‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அறநிறுவனத்தின் அனைத்துலகக் குடியேறிகள் மாதத்தின் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஊழியர்களும் தொண்டூழியர்களும் பிரியாணி சாப்பிட்டு, கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
சிங்கப்பூரைப் பற்றிய புதிர்ப் போட்டி ஒன்றும் இடம்பெற்றது. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம், சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையிலான வாய்ப்புகள் உருவாவதாக ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அறநிறுவனத்தின் தலைவர் இசிக்கில் டான் தெரிவித்தார்.
கலாசார, சமூக இளையர் துணையமைச்சர் ஆல்வின் டான் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். சிங்கப்பூரில் வாழ்பவர்களில் ஐவரில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் எனக் குறிப்பிட்ட திரு டான், கொவிட்-19 கிருமிப்பரவல் பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொடுத்திருப்பதாகக் கூறினார். “ஊழியர்களின் தங்குவிடுதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அவர்களது உடல்நலமும் மனநலமும் பாதுகாக்கப்படவேண்டும்,” என்று திரு டான் வலியுறுத்தினார்.
மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், வேலைவாய்ப்பு முகவைகள் சங்கம், சமூக ஆதரவுக்கான பணிப்பெண் சங்கம் உள்ளிட்ட அமைப்புடன் சிண்டா இளையர் மன்றம், தாவோயிச இளையர் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுள்ளது ‘டுகெதர் இன் சிங்கப்பூர்’ திட்டம்.