இதுவரை இல்லாத வகையில் $2.8 பில்லியன் மதிப்பிலான கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் வழக்கை சிங்கப்பூர் சிறப்பான முறையில் கையாண்ட விதத்தை, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், தீவிரவாதத்துக்கு நிதியளித்தலுக்கு எதிரான ஐக்கிய அரபு சிற்றரசுகளின் நிர்வாக அலுவலகத்தின் தலைவர் பாராட்டியுள்ளார்.
இந்த வழக்கை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தது என்றும் இது உலகுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியது என்றும் திரு ஹமிட் அல்ஸாபி தெரிவித்தார்.
“சிங்கப்பூரின் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் வழக்கு உலக அளவில் முக்கியத்துவம் பெற்று பாராட்டத்தக்கதாக உள்ளது,” என்றும் திரு ஹமிட் கூறினார்.
“பறிமுதல் செய்யப்பட்ட பெரும்தொகை, அந்நாட்டின் தேசிய பணமோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலுக்கு எதிரான செயல்பாட்டில் குறைத்து மதிப்பிட்டுக் காட்டும் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறானது.
“மாறாக, அது இரண்டு முக்கிய அம்சங்களைப் பிரதிபலிக்கிறது. ஒன்று, பண மோசடி என்பது உலக அளவில் பெருத்து பரவியுள்ளது. இரண்டு, பணமோசடி செய்பவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களைத் தேடி கண்டுபிடித்து சட்டத்துக்கு முன் நிறுத்தும் என்பதை சிங்கப்பூர் நிரூபித்துள்ளது,” என்றும் தெரிவித்தார் திரு ஹமிட்.
சிங்கப்பூருக்கு நவம்பர் மாதம் தனது ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிகாரிகளுக்குத் தலைமையேற்று வந்திருந்த திரு ஹமிட், மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.