உலகின் மற்ற பகுதிகளுடனான சிங்கப்பூரின் ஈடுபாட்டைக் கையாள, 4ஆம் தலைமுறைத் தலைமைத்துவம் நாட்டை முக்கிய பங்காளிகளுக்கு பொருத்தமானதாக்குவதற்கும் ஆதரவுக் கூட்டணியைத் திரட்டுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சிங்கப்பூரர்கள் நம்புகின்றனர்.
மக்கள் செயல் கட்சியின் (மசெக) ‘பாலிசி ஃபோரம்’ (பிபிஎஃப்) அண்மையில் நடத்திய இணையக் கருத்தாய்வில் பங்கேற்ற 1,300க்கும் மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் இந்த முன்னுரிமை ஓரளவு முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோஸஃபின் டியோ நவம்பர் 24 முதல் 29 வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளை, தி ஸ்டார் ஃபர்போமிங் ஆர்ட்ஸ் சென்டரில் சனிக்கிழமை (டிசம்பர் 2) நடந்த பிபிஎஃப் கலந்துரையாடலில் வெளியிட்டார்.
காலஞ்சென்ற மதியுரை அமைச்சர் லீ குவான் யூ பற்றிக் குறிப்பிட்ட அவர், கருத்தாய்வின் கேள்விகள், சிங்கப்பூரின் அனைத்துலக ஈடுபாடு குறித்த அவரது சிந்தனை, அவர் செய்தவற்றுக்கான காரணம், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற அவரது எண்ணம் போன்ற திரு லீயின் முக்கிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன,” என்றார்.
சிங்கப்பூரின் நிறுவன பிரதமர் திரு லீயின் நூற்றாண்டு விழாவையும் நாட்டின் எதிர்காலத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் பிபிஎஃப்பின் முயற்சியையும் ஒட்டி மூன்று பகுதிகளாக இடம்பெற்ற நிகழ்வின் இறுதி அங்கமாக இக்கலந்துரையாடல் நடந்தது.
மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் கொள்கைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் தலைவர்களுடனான நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் பிபிஎஃப் ஒரு தளமாக செயல்படுகிறது.
மசெக உறுப்பினர்கள் உட்பட கருத்தெடுப்பில் பங்கேற்ற பொதுமக்கள், சிங்கப்பூரின் தற்போதைய அனைத்துலக நிலைப்பாட்டிற்கு மிகவும் பங்களித்ததாக தாங்கள் நம்பும் மூன்று காரணிகளை வரிசைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக திருவாட்டி டியோ கூறினார்.
“சிறிய நாடாக இருப்பதன் வரம்புகளை உணர்தல்”, “வட்டார நாடுகளைவிட அதிக முன்னேற்றம் காண்பதும், நம்மை வேறுபடுத்திக்கொள்வதும்”, “முக்கிய பங்காளிகளுக்கு பொருத்தமானவர்களாக இருப்பதும் ஆதரவுக் கூட்டணியைத் திரட்டுவதும்” ஆகியவை முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.
கலந்துரையாடலில் உரையாற்றிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், திரு லீயும் முதல் தலைமுறை மசெக தலைவர்களும் சிங்கப்பூருக்காக நிறுவிய நிர்வாகக் கோட்பாடுகளை பட்டியலிட்டார்.
“கோட்பாடுகளுக்கு காலவரம்பில்லை. ஆனால் அவற்றைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது இயலாத காரியம்,” என்றார் அவர்.
நீண்டகாலத்தில் ஒழுக்கமும் ஒருமித்த கவனமும் அவசியம் என்ற துணைப் பிரதமர், “பெரிய, அதிக வளங்கள் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது, சிங்கப்பூருக்கு குறைவான வரையறையே உள்ளது. நமக்கு மீள்திறன் இல்லாது போகலாம். எனவே, சிங்கப்பூர் ஒளிமயமாகவும் வெற்றிகரமாகவும் இருக்க தொடர்ந்து மறுபரிசீலனை செய்து, புதுப்பித்துக்கொள்வது ஒரு முக்கியமான தலைமைத்துவ பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் காலத்துக்கு ஏற்றதாகத் திகழ ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்தோடும், வெற்றிநடை போடுவதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் வளங்களை விரிவாக்குவது, நல்ல வேலைகளை உருவாக்குவது, சிங்கப்பூரர்களை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான பொருளியல் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மாறாமல் உள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூர் ஒளிமயமாகத் திகழ, சிங்கப்பூர் தொடர்ந்து பரந்த கண்ணோட்டமும் உழைக்கும் உறுதியும் கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர்.