காஸா: காஸாவில் உள்ள பெரிய நகரங்களில் ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடரும் போரால் மேலும் பல நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
அத்துடன், கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதுகாப்பான தங்குமிடம் தேடி வரும் நிலையில் அவர்களின் அத்தியாவசியத் தேவையான உணவு, தங்குமிட வசதி ஆகியவற்றில் கடுமையான தடுப்பாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு காஸா நகரான யூனிஸ் கானில் கடுமையான போர் நிலவுவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். இங்கு இஸ்ரேலிய ஆகாயத் தாக்குதலால் மூன்று காஸா குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காஸா பகுதியின் யூனிஸ் கானிலுள்ள சுரங்கப் பாதையிலிருந்து வெளிவந்த பல வீரர்களை தனது படையினர் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஹமாஸ் போராளிகள் என பிடிக்கப்பட்டவர்களை இஸ்ரேலிய தொலைக்காட்சி காண்பித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது. அவர்கள் ஆடைகளைக் களைந்து உள்ளாடையுடன் தெருவில் உட்கார்ந்து இருப்பதை தொலைக்காட்சி காண்பித்தது.
எனினும், அவர்கள் உ ண்மையிலேயே போராளிகள்தானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
பாலஸ்தீனர்களில் சிலர் அவர்களில் தங்கள் உறவினர்கள் இருப்பதை அறிந்து அவர்களுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர்.
ஹனி அல்மடுன் என்ற வெர்ஜினியாவில் வசிக்கும் பாலஸ்தீனர் ஒருவர், தெருவில் உட்கார வைக்கப்பட்டவர்களில் தனது உறவினர்களைத் தம்மால் காண முடிந்ததாகவும் அவர்கள் அப்பாவி குடிமக்கள், ஹமாஸ் இயக்கத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள் எனக் கூறினார் என ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, பாலஸ்தீன ஆணையம் போருக்குப் பிந்திய காஸா பகுதியை ஆள்வது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாக பாலஸ்தீனப் பிரதமர் முகம்மது ஷட்டயே என்பவரை மேற்கோள் காட்டிக் கூறுகிறது என்று புளூம்பெர்க் செய்தித் தகவல் தெரிவிக்கிறது. கூறப்படுகிறது.
போருக்கு பிந்திய ஆட்சி அமைப்பில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் ஹமாஸ் இயக்கம் சிறிய அளவில் ஆட்சியில் பங்குபெறும் என்றும் இவை இணைந்து மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலம், ஆகியவற்றுடன் கூடிய சுதந்திர நாடு அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக திரு ஷட்டயே விளக்கினார்.