கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 87 வயது அன்னம்மா துரைராஜ், தம் குடும்பத்தினருடன் இளம் பாடகர்கள் சிலருக்காகத் தம் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்து வரவேற்றார்.
“தடபுடலான கொண்டாட்ட உணர்வு. ஒரே குதூகலமாக இருந்தது,” என்று மலர்ந்த முகத்துடன் கூறினார். கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய வாரங்களில் பாடல் குழுக்கள் தேவாலய உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்வது வழக்கம்.
இவ்வாறு ஈசூன் ‘லைஃப் சென்டர்’ தேவாலயத்தைச் சேர்ந்தோர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக ஈசூன் ஸ்திரீட் 21ல் வசிக்கும் திருமதி அன்னம்மாவின் வீட்டுக்கு வந்திருந்தனர்.
“என் வீட்டுக்கு அவர்கள் வருவதைப் பெரிதும் விரும்புகிறேன். எல்லோரும் அருமையாகப் பாடினர்,” என்று திருமதி அன்னம்மா ஆனந்தம் ததும்பும் குரலில் கூறினார்.
பெரும்பாலும் இளையர்களைக் கொண்ட இந்தக் குழு, ஆங்கிலத்திலும் தமிழிலும் பாடி கித்தார், போங்கோ போன்ற கருவிகளை வாசித்தது.
தேவாலய போதகர் இயேசு கிறிஸ்துமஸ் பற்றிய போதனைகளை அங்கு கூடியிருந்தோர் முன் உரையாற்றினார்.
நான்கைந்து பாடல்களைக் குழுவாகத் தேர்ந்தெடுத்து வாரயிறுதிகளில் பயிற்சி செய்வதாக இவ்வாண்டு முதல்முறையாகப் பாடல் குழுவில் பங்கேற்கும் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் ரோஷன், 19, கூறினார்.
வயதான தம் தாயாரின் முக மலர்ச்சிக்காக இந்தக் கொண்டாட்டங்களை வரவேற்பதாக திருமதி அன்னம்மாவின் மகள் திருவாட்டி ஹெலன் கூறினார்.
கடந்த மூன்று மாதங்களாகத் தனிப்பட்ட துயர்களையும் சவால்களையும் இத்தருணத்தில் நினைத்துப் பார்த்த திருவாட்டி ஹெலன், இறைவனை இன்றளவும் நம்பிக்கொண்டு வருங்காலத்திற்குள் அடியெடுத்து வைக்கப்போவதாகவும் கூறினார்.
இவ்வாண்டு அக்டோபர் மாதத்தின்போது புனிதத் தலங்களைக் காண்பதற்காக அவர் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார்.
இஸ்ரேலில் இறைவனை நினைத்து நெகிழ்ந்த தருணங்களை இந்த கிறிஸ்துமஸ் தினம் தமக்கு நினைவூட்டுவதாகவும் அவர் கூறினார்.
“கரடுமுரடான பயணம் அது. பயணத்தின் முதல் நாளன்றே இஸ்ரேலில் போர் மூண்டது,” என்று அவர் கூறினார்.
பைபிளில் குறிப்பிடப்பட்ட பல்வேறு இடங்களை அவர் நேரடியாகச் சுற்றிப் பார்த்ததை மகிழ்ச்சியுடன் விவரித்தார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாகப் போற்றப்படும் பெத்தலஹேமிற்குப் போக அவரால் முடிந்தது. இருந்தபோதும், வட்டாரப் பதற்றநிலை காரணமாக சிலுவையில் அறையப்பட்ட இடமான ஜெரூசலத்திற்குச் செல்ல முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.
பயணத் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதும் இறுதியில் பாதுகாப்புடன் சிங்கப்பூரை அடைந்தது குறித்து மகிழ்கிறார். எந்தச் சூழலிலும் இறைவன் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உணர்வை கிறிஸ்துமஸ் புகட்டுவதாக அவர் சொன்னார்.