சிங்கப்பூர் அறநிறுவனங்களின் மூலம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நிதி வந்ததற்கான அறிகுறி இல்லை என்று அறநிறுவன ஆணையாளர் (சிஓசி) தெரிவித்துள்ளார்.
இத்தகைய நோக்கங்களுக்காக அறநிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உதவித்தொகுப்பு ஒன்றையும் சிஓசி வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத நிதியளிப்புக்கெனத் தவறான முறையில் பயன்படுத்தப்படும் அபாயத்தை அறநிறுவனங்கள் அடையாளம் காண இந்த உதவித்தொகுப்பு கைகொடுக்கும்.
பயங்கரவாதம் தொடர்பான செயல்பாடுகளுக்கு ஆதரவாக, அல்லது பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி திரட்டி அல்லது நிதி மாற்றிவிட, லாப நோக்கற்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் சூழல் எழக்கூடும்.
அறநிறுவனங்கள் உட்பட இங்குள்ள லாப நோக்கற்ற அமைப்புகள் இத்தகைய அபாயத்தில் உள்ளதை 2020 சிங்கப்பூர் பயங்கரவாத நிதியளிப்பு தேசிய இடர் மதிப்பீடு கண்டறிந்துள்ளதாக டிசம்பர் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சிஓசியின் 2022 வருடாந்தர அறிக்கை குறிப்பிட்டது.
அறநிறுவனப் பிரிவின் பன்முகத்தன்மையால் பயங்கரவாத நிதியளிப்புக்காக அவற்றை வெவ்வேறு வழிகளில் தவறாகப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படலாம் என்று சிஓசி டெஸ்மண்ட் சின் தெரிவித்தார்.
“எனவே, அறநிறுவனங்கள் தங்களின் நிர்வாகக் கட்டமைப்பையும் நிதிநிலைக்குரிய கட்டுப்பாடுகளையும் வலுவாக்குவது அவசியம். நன்கொடையாளர்கள், பங்காளிகள் போன்ற தங்கள் பங்குதாரர்களைப் பற்றி அறநிறுவனங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். நன்கொடை நிதியை வழங்கியோரும் நன்கொடை அளிக்கப்பட்டதன் நோக்கமும் சட்டத்துக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதிசெய்வது முக்கியம்,” என்று சுட்டினார் திரு சின்.
இதற்காக, சிஓசி அலுவலகம் 2023ஆம் ஆண்டில் இரு பயிற்சி அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2024ல் மேலும் மூன்று அமர்வுகளை நடத்தவும் உள்ளது.
உதவித்தொகுப்பின் கொள்கைகள், சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை அறநிறுவனங்கள் நன்கு புரிந்துகொள்ள இந்த அமர்வுகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.