நெதர்லாந்து நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 48 வயது திரு பீட்டர் வென்டல், செக் குடியரசுத் தலைநகர் பிராக்கில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது வலது தொடையில் குண்டு பாய்ந்தது.
ஆம்புலன்சில் இருந்தபோது அவர் தமது மனைவிக்கு “நான் உயிருடன் இருக்கிறேன்,” என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதியன்று பிராக்கில் உள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர் ஒருவர் அங்கிருந்தவர்களைக் குறிவைத்துச் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 14 பேர் மாண்டனர்.
அப்போது விடுமுறைக்காக திரு வென்டலும் அவரது குடும்பத்தினரும் பிராக்கில் இருந்தனர்.
அவர்களது விடுமுறைப் பயணத்தின் கடைசி நாளில் அந்தப் பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது.
துப்பாக்கி சுடப்படும் சத்தம் கேட்டு திரு வென்டலும் அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது திரு வென்டலின் வலது தொடையில் குண்டு பாய்ந்தது.
அவரைப் பத்திரமான ஓர் இடத்துக்குக் கொண்டு செல்ல அவரது மனைவியான் 40 வயது திருவாட்டி சோஃபியா முசா முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அருகில் இருந்த இருவர் திரு வென்டலுக்கு உதவி செய்து அவரைக் காப்பாற்றினர்.
ஆம்புலன்சில் இருந்தபோது தமது மனைவி, 15 வயது மகள், 5 வயது மகன் பற்றி நினைத்ததாக திரு வென்டல் கூறினார்.
மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு தாம் சுயநினைவு இழந்ததாகவும் திரு வென்டல் தெரிவித்தார்.
இந்நிலையில், திரு வென்டலுக்கு பிராக்கில் இருமுறை அறுவை சிகிச்சை நடத்தப்பட வேண்டி இருந்தது.
மிகவும் சிரமப்பட்டு ஜனவரி 14ஆம் தேதியன்று திரு வென்டலும் அவரது மனைவியும் சிங்கப்பூர் திரும்பினர்.
சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் திரு வென்டலுக்கு மேலும் ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இறுதி அறுவை சிகிச்சை ஜனவரி 25ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.