ஜெருசலம்: ஒருபக்கம் நான்கு மாதமாக இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக தொடரும் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரலாம் என சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருபவர்கள் யோசித்து வருகின்றனர்.
மறுபக்கம், இஸ்ரேலிய ராணுவம் தனது நாட்டைத் தாக்கப் பயன்படுத்திய ஹமாஸ் இயக்கத்தின் விரிவான சுரங்கப் பாதை கட்டமைப்பை செயலிழக்கச் செய்ய அவற்றில் தண்ணீரை நிரப்பி வெள்ளப் பெருக்கெடுத்து ஓட வைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரம் போரின் மையப் பகுதியாக விளங்குகிறது. அங்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலால் அந்த நகரமே இடிந்த கட்டடங்கள் நிறைந்த வீணான பகுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸின் சுரங்கப் பாதைக் கட்டமைப்பை நகரம் என்று வர்ணிக்கும் இஸ்ரேலிய ராணுவம், அங்கு நீரை நிரப்பும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறுகிறது.
“இது விரிவாக அமைக்கப்பட்டு இருக்கும் சுரங்கப் பாதை கட்டமைப்பை செயலிழக்கச் செய்யும் ராணுவத்தின் பல உத்திகளில் ஒன்று,” என்று அந்நாட்டு ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இந்தப் போர் தொடங்கியபோது 500 கிலோமீட்டர் பரப்பளவில் 1,300 சுரங்கப் பாதைகள் இருந்ததாக வெஸ்ட் பாயிண்ட் என்ற அமெரிக்க ராணுவப் பயிற்சிக் கழகம் ஆய்வு ஒன்றில் தெரிவித்தது.
இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் இயக்கம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம், ஹமாஸ் சுரங்கப் பாதைகளை அழிக்க உறுதி கூறியது.
ஹமாஸ் நடத்திய அந்தத் தாக்குதலில் 1,140 பேர் கொல்லப்பட்டனர் என்று ஏஎஃப்பி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், ஏறக்குறைய 250 பேர் பிணைக் கைதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டனர். இவர்களில் இன்னமும் 132 பேர் பிணைக் கைதிகளாக உள்ள நிலையில் பிணைக் கைதிகளில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஆகாய, தரை, கடல் தாக்குதல் என போர் தொடுத்துள்ள நிலையில் காஸாவில், சிறார், பெண்கள் உள்பட குறைந்தது 26,751 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதியில் உள்ள சுகாதார அமைச்சு கூறுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை (ஜனவரி 31) அன்று இஸ்ரேலிய ராணுவம் வடக்கு, தெற்கு காஸா பகுதியை தாக்கியதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
மற்றொரு நிலவரத்தில் ஹமாஸ் இயக்கம் புதிய அமைதித் திட்டம் ஒன்றை தான் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. அந்தத் திட்டத்தில் போர்நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுதலை ஆகியவை அடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகளில் மிக முக்கியமான முயற்சி என்றும் கூறப்படுகிறது.