வாஷிங்டன்: டிக்டாக்கின் தலைமை நிர்வாகி சியூ ஷோ ஸியிடம் அமெரிக்க செனட்டர்கள் விசாரணை நடத்தினர்.
டிக்டாக்கிற்கு சீனாவுடன் இருக்கும் தொடர்பு, அதன் சீன உரிமையாளர்கள், அரசியல் தொடர்பான கருத்துகள் அதில் தணிக்கை செய்யப்படுவது போன்ற பல கேள்விகள் சிங்கப்பூரரான திரு சியூவிடம் அடுக்கடுக்காகக் கேட்கப்பட்டன.
திரு சியூ எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஜனவரி 31ஆம் தேதியன்று கெப்பிட்டல் ஹில்லில் செனட் நீதித்துறை குழு திரு சியூவிடமும் மீட்டாவின் திரு மார்க் ஸக்கர்பர்க், ஸ்னாப்பின் திரு இவான் ஸ்பீஜல், எக்ஸ் தளத்தின் திருவாட்டி லின்டா யக்காரினோ, டிஸ்கோர்ட்ஸின் திரு ஜேசன் சிட்ரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
மீட்டா, ஸ்னாப், எக்ஸ் தளம், டிஸ்கோட்ர்ஸ் ஆகியவற்றில் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது தொடர்பான உள்ளடக்கம் அதிகரித்திருப்பது குறித்து அந்தந்த பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்கும் வகையில் பாதிக்கப்பட்டோருக்கு அனுமதி வழங்க சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று அந்த நால்வரிடமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் திரு ஸக்கர்பர்க்கிற்குப் பின்னால் பதாகைகளை ஏந்திக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களைத் திரும்பிப் பார்க்குமாறு திரு ஸக்கர்பர்க்கிற்கு உத்தரவிடப்பட்டது.
அந்த பெற்றோர் அனுபவித்த வேதனைக்கு திரு ஸக்கர்பர்க் வருத்தம் தெரிவித்தார்.
இனி அதுபோன்ற தவறு நடக்காது என்று அவர் உறுதி அளித்தார்.
இதற்கிடையே, சீனாவுடனான தொடர்பு குறித்து திரு சியூவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
தமக்குத் தாமே காயங்கள் ஏற்படுத்திக்கொள்வது தொடர்பான காணொளிகள், இஸ்ரேல் எதிர்ப்பு கருத்துகள் ஆகியவற்றை டிக்டாக் அமெரிக்காவில் பரப்புவதாக டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ் கூறினார்.
திரு குரூசின் கருத்துகள் துல்லியமற்றவை என்று திரு சியூ பதிலளித்தார்.
சர்ச்சைக்குரிய விவகாரங்கள் என சீனா கருதுபவை டிக்டாக்கில் அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்று திரு குரூஸ் குற்றம் சாட்டினார்.
இந்தப் பகுப்பாய்வு தவறானது என்றும் டிக்டாக்கிற்கு எதிராகப் பாரபட்சமிக்கது என்றும் திரு சியூ தெரிவித்தார்.
திரு சியூவின் குடியுரிமை குறித்தும் செனட்டர்கள் கேள்வி எழுப்பினர். சிங்கப்பூரைத் தவிர்த்து வேறு நாடுகளின் குடியுரிமையை அவர் பெற்றிருக்கிறாரா என்ற அவரிடம் கேட்கப்பட்டது. இதை திரு சியூ மறுத்தபோது, சீனக் குடியுரிமைக்கு அவர் விண்ணப்பம் செய்ததுண்டா என்று அர்கான்சாஸ் மாநிலத்தின் குடியரசுக் கட்சி செனட்டர் டாம் கொட்டன் கேள்வி கேட்டார்.
“செனட்டர், நான் என் தாய்நாடான சிங்கப்பூருக்குச் சேவையாற்றியவன்,” என்று திரு சியூ பதிலளித்தார்.
சீனக் குடியுரிமைக்கு அவர் விண்ணப்பம் செய்ததில்லை என்று அவர் கூறினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் திரு சியூவுக்குத் தொடர்பு உள்ளதா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரு சியூ, “ செனட்டர் அவர்களே, நான் ஒரு சிங்கப்பூரர். சீன கம்பூனிஸ்ட் கட்சியுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை,” என்று பதிலளித்தார்.