குழந்தைகளின் கிட்டப்பார்வை குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் அட்ரோபின் சொட்டு மருந்துகள் மீதான சந்தேகத்தை, உள்ளூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தீர்த்து வைத்துள்ளது.
1990கள் முதல் குழந்தைகளின் கிட்டப்பார்வைக் குறைபாட்டுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் அந்த வகை சொட்டு மருந்துகள் நீண்டகால பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
அந்த சொட்டு மருந்தைப் பயன்படுத்திய பின்னர் கண்ணில் கூச்சமும் மங்கலான கிட்டப் பார்வையும் ஏற்படுவதாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த சொட்டு மருந்துகள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
அதுபோன்ற சொட்டு மருந்துகள் பாதுகாப்பானவை என்றும் அவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை செய்த பின்னர் 10 முதல் 20 ஆண்டுகள் வரை எந்தவித சிக்கலும் ஏற்படாது என்றும் ஆய்வு கண்டறிந்து உள்ளது.
‘அட்ரோபின் சிகிச்சை நீண்டகால மதிப்பீட்டு ஆய்வு’ என்னும் அந்த ஆய்வை சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையமும் சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தின.
கண்களுக்கான இதுபோன்ற சொட்டு மருந்து சிகிச்சையின் நீண்டகால பாதுகாப்பு தொடர்பில் இங்கு நடத்தப்பட்ட முதல் ஆய்வு அது என்று நம்பப்படுகிறது.
குழந்தைகளுக்கும் பதின்மவயதினருக்கும் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதைத் தணிக்க அட்ரோபின் சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும் அதனை மிதமிஞ்சிப் பயன்படுத்தும்போது சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் சிங்கப்பூரில் அதிகமாக உள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் 10ல் 9 சிங்கப்பூர் பெரியவர்களுக்கு அந்தக் குறைபாடு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.