லாபத்தைப் பங்குதாரர்களுக்குப் பிரித்துத் தராமல் மீண்டும் மருத்துவமனை வளர்ச்சியில் முதலீடு செய்தல் அல்லது அறச்செயல்களுக்குப் பயன்படுத்துதல் எனும் புதிய முறையின்கீழ், நோயாளிகளுக்கான மருத்துவமனைக் கட்டணம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
அதிகமான கட்டணங்களைத் தவிர்ப்பது இதன் நோக்கம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங், பிப்ரவரி 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் குறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இருப்பினும் அத்தகைய மருத்துவமனைகளுக்குத் தனிப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு உரிமம் வழங்கப்படும் என்றார் அவர். புதிய முறையின்கீழ் வலுவான நிர்வாகத்திற்கு அது உதவும்.
இந்தப் புதிய முறையின்கீழ் செயல்படும் மருத்துவமனைகள், வலுவான மேற்பார்வையுடன் மருத்துவர்களின் மருந்தக நடைமுறைகளில் கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
நோயாளிகளுக்கு சேவையளிக்க, பொதுநல மருத்துவர்கள் முதல் மறுவாழ்வுப் பிரிவு ஊழியர்கள் வரை ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
மருத்துவமனைகள் இந்த அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். இவற்றின் அடிப்படையில்தான் அவை மதிப்பிடப்படும் என்று கூறிய அமைச்சர், இந்த முறையின்கீழ் செயல்படும் புதிய மருத்துவமனைகள் முக்கியமாக சிங்கப்பூரர்களுக்கு சேவை வழங்கும் என்றார்.
உரிமம் பெறுவதற்கு ஒரு நிறுவனம், நிலத்திற்கான விலையைச் செலுத்தி அந்த இடத்தில் மருத்துவமனையைக் கட்ட விரும்பினால் மட்டும் போதாது என்று அவர் எடுத்துரைத்தார்.
சிங்கப்பூரில் தற்போது மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனை மட்டுமே லாபத்தை மீண்டும் வளர்ச்சியில் முதலீடு செய்யும் முறையின்கீழ் செயல்படுகிறது.
சுகாதார அமைச்சு, ஜனவரி 8ஆம் தேதி, இந்தப் புதிய முறை குறித்து அறிவித்தது.
இதன் தொடர்பிலான ஆலோசனையில் பங்கெடுக்கும்படி தனியார் மருத்துவமனைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு அது அழைப்பு விடுத்தது.
சிங்கப்பூரில் இத்தகைய முறையையும், வளர்ச்சியடைந்த இதர பொருளியல்களில் நோயாளிகள் பராமரிப்பு முறையையும் ஒப்பிடும் மதிப்பீடுகள் செய்யப்பட்டனவா என்று ஜூரோங் குழுத்தொகுதி உறுப்பினர் டான் வூ மெங் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓங் பதிலளித்தார்.