ஆசியாவிலிருந்து கூடுதலான குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளனர். 2022ல் ஆஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியது.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது ஆஸ்திரேலியா அதன் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதால் கிட்டத்தட்ட ஈராண்டுகளாக திறன்பெற்ற குடியேறிகள் அங்கு செல்ல முடியவில்லை.
ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மீண்டும் திறந்த பிறகு அங்கு ஊழியர் பற்றாக்குறையைத் தீர்க்க சிங்கப்பூர், இந்தியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கூடுதலானோர் அங்கு செல்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் குடியேற நிரந்தர விசா பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 2023ல் முடிவடைந்த நிதியாண்டில் 41,145ஆகக் கூடியது. ஒப்புநோக்க, 2018 முதல் 2019 வரை விசா பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 33,611ஆக இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயரும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
2023ல் முடிவடைந்த நிதியாண்டில் 1,718 சிங்கப்பூரர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது. 2019ல் முடிவடைந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,135ஆக இருந்தது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் குடியேறிகளின் விகிதம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, குடியேறிகளின் வருகையைக் குறைக்க அந்நாடு நடவடிக்கை எடுக்கிறது. அடுத்த ஈராண்டுகளுக்கு குடியேறிகளின் வருகையைப் பாதியாகக் குறைக்க தான் எண்ணம் கொண்டிருப்பதாக டிசம்பர் 11ஆம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்தது.
சிங்கப்பூரர்கள் பலதரப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்கின்றனர். மேம்பட்ட வேலை, வாழ்க்கைச் சமநிலை, சிங்கப்பூரில் இருப்பதைவிட குறைந்த வாழ்க்கைச் செலவினம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் என புலம்பெயர்ந்தோருக்கான அமைப்புகள் தெரிவித்தன.
ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த சிங்கப்பூரர்கள், அங்குள்ள மெதுவான வாழ்க்கைச் சூழலையும் குறைந்த மனவுளைச்சலைத் தரும் வேலைச் சூழலையும் தாங்கள் ரசிப்பதாகக் கூறினர்.