இந்தோனீசிய அதிபர் தேர்தல் சுமுகமாக நடந்தேறியதற்கு அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு பிரதமர் லீ சியன் லூங் வியாழக்கிழமை தமது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்தோனீசியா புதன்கிழமை அதன் அதிபர் மற்றும் சட்டமன்றத் தேர்தலை நடத்தியது. தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 205 மில்லியன்.
தங்களது பதவிக்காலத்தின்போது நீண்டகால இருதரப்பு விவகாரங்களுக்குத் தீர்வுகண்டு இரு நாடுகளுக்கு இடையே அணுக்கமான உறவுகளை இரு தலைவர்களும் வலுப்படுத்தியதாக பிரதமர் லீயின் செய்தித் தொடர்பாளர் சாங் லி லின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அவற்றில் மூன்று விவகாரங்கள் குறித்து 2022 ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர்-இந்தோனீசிய தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது பேசப்பட்டன. அத்தகைய சந்திப்புக்கு அவர்கள் கூடியிருப்பது அது ஐந்தாவது முறை.
ஓய்வுத்தளச் சந்திப்பின்போது மூன்று உடன்பாடுகள் கையெழுத்தாவதை அவர்கள் பார்வையிட்டனர். அவை வட்டார விமானப் பயணத் தகவல், தற்காப்பு ஒத்துழைப்பு, கைதிகள் பரிமாற்றம் சார்ந்தவை.
நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கப் பொருளியல், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட புதிய ஒத்துழைப்பு அம்சங்களுக்கு இரு தலைவர்களும் வழிவகுத்ததாக திருவாட்டி சாங் கூறினார்.
திரு விடோடோவை தொடர்புகொண்ட பிரதமர் லீ, இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோவையும் தொடர்புகொண்டு பேசினார். புதன்கிழமை நடைபெற்ற இந்தோனீசிய அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களில் திரு பிரபோவோவும் ஒருவர்.
தேர்தலில் சிறந்து விளங்கியதற்காக திரு பிரபோவோவுக்கு பிரதமர் லீ பாராட்டுதலைத் தெரிவித்துக்கொண்டார்.