புளூம்ஃபோன்டைன் (தென்னாப்பிரிக்கா): மார்னஸ் லபுஷேன் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைக் குவிக்க, தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி 49 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை எடுத்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய அவ்வணித் தலைவர் டெம்பா பவுமா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைக் குவித்தார்.
இரண்டாவதாகப் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 72 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அவ்வேளையில், தலையில் அடிபட்ட கேமரன் கிரீனுக்கு மாற்றாகக் களம் கண்டார் லுபுஷேன். எட்டாவது விக்கெட்டுக்கு அவரும் ஆஷ்டன் ஏகாரும் (48) இணைந்து 112 ஓட்டங்களைச் சேர்த்து, ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றித் தொடக்கம் தந்தனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை நடக்கவுள்ளது.