லாகூர்: ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்து சூப்பர் 4 சுற்று தொடங்கியுள்ளன. புதன்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், பங்ளாதேஷ் அணிகள் மோதின.
முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணி பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் தலைவர் ஷகீப் உல் ஹசனும் முஷ்புகீர் ரஹ்மானும் மட்டும் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற 193 ஓட்டங்களில் பங்ளாதேஷ் சுருண்டது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40வது ஓவரில் 194 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், அதிகபட்சமாக 78 ஓட்டங்களைச் சேர்த்தார். ஹாரிஸ் ரவுஃப் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.