துபாய்: இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19ஆம் தேதிவரை உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், அப்போட்டிகளுக்கு நடுவர்களாகச் செயல்பட உள்ளோரின் பட்டியலை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
அதன்படி, நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதும் முதல் போட்டிக்கு இந்தியாவின் நித்தின் மேனனும் இலங்கையின் குமார் தர்மசேனாவும் கள நடுவர்களாகச் செயல்படுவர். ஆட்ட நடுவராக இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் இருப்பார்.
நித்தின் மேனன் உள்ளிட்ட 16 பேர் கள நடுவர் பட்டியலிலும் ஸ்ரீநாத் உள்ளிட்ட நான்கு பேர் ஆட்ட நடுவர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நடுவர்கள் பட்டியல் லீக் சுற்றுப் போட்டிகளுக்கு மட்டுமே. அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.