சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், சீனாவின் ஹாங்ஸோவ் நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்.
சிங்கப்பூர் தரப்பில் களமிறங்கும் 431 வீரர்கள், வீராங்கனைகளின் பெயர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 28 வயது ஸ்கூலிங்கின் பெயர் இடம்பெறவில்லை.
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ஆம் தேதிவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த இரு போட்டிகளில் ஸ்கூலிங் மூன்று தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் வென்றிருந்த நான்கு தங்கப் பதக்கங்களில் இரண்டு ஸ்கூலிங்கிடமிருந்து வந்தன. 50 மீட்டர், 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் அவர் தங்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில் ஸ்கூலிங் வெளியிட்ட அறிக்கையில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான் பங்கெடுக்கவில்லை என்றாலும், அணியினர் சிறப்பாகச் செயல்பட்டு சிங்கப்பூருக்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
“எனது பயிற்சி, போட்டி குறித்த நிலையில் மாற்றம் எதுவும் இல்லை. எனது எதிர்காலம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்,” என்று கூறினார்.