புதுடெல்லி: வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நிலையில், இந்திய அணியில் நான்காவது வீரராக யாரைக் களமிறக்கலாம் என்பதில் பலகாலமாகவே குழப்பம் நீடித்து வருகிறது. அதுகுறித்த விவாதம் முடிந்தபாடில்லை.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராத் கோஹ்லிதான் அவ்விடத்திற்கு மிகப் பொருத்தமானவர் என்று அடித்துச் சொல்கிறார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ்.
“இந்திய அணியின் நாலாவது பந்தடிப்பாளர் குறித்து இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம். அவ்விடத்திற்கு விராத் கோஹ்லியின் பெயர் அடிபடுகிறது. அதனை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
“நாலாமிடத்திற்கு கோஹ்லிதான் மிகச் சரியான ஆள். களமிறங்கும் நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, சூழ்நிலைக்கேற்ப விளையாடி, அவரால் அணிக்கு வலுச்சேர்க்க முடியும்.
“ஆனால், நாலாம் நிலையில் களமிறங்க கோஹ்லி விரும்புவாரா எனத் தெரியவில்லை. ஏனெனில், மூன்றாம் நிலையில்தான் அவர் அதிக ஓட்டம் குவித்துள்ளார். ஆயினும், அணிக்குத் தேவையெனில், நாலாம் நிலையில் களமிறங்கத் தயாராக அவர் முன்வர வேண்டும்,” என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.