லண்டன்: இப்பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது செல்சி குழு.
தனது ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில், லீக்கின் புதுவரவான லூட்டன் டவுன் குழுவை 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்கடித்தது.
அக்குழுவின் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவரான ரஹீம் ஸ்டெர்லிங் இரண்டு கோல்களைப் போட்டு, வெற்றிக்கு வித்திட்டார்.
அதிலும், ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் எதிராளிகள் பலரைக் கடந்து, அவர் பந்தை வலைக்குள் அனுப்பியது மிக அருமையாக இருந்தது.
மான்செஸ்டர் சிட்டி குழுவில் இருந்து ஓராண்டிற்குமுன் செல்சிக்கு இடமாறிய பிறகு, ஸ்டெர்லிங் பெரிதும் தடுமாறி வந்தார்.
ஆனால், செல்சியின் புது நிர்வாகியாக மௌரிசியோ பொக்கெட்டினோ பதவியேற்றபின் அவரது ஆட்டம் மெருகேறி வருகிறது.
லிவர்பூல், வெஸ்ட் ஹேம் குழுக்களுக்கு எதிரான ஆட்டங்களிலும் ஸ்டெர்லிங்கின் ஆட்டத்திறன் வெளிப்பட்டது.
பொக்கெட்டினோவும் ஸ்டெர்லிங்கின் ஆட்டத்தை வெகுவாக மெச்சினார்.
“குழுவிற்குப் பங்களிக்க வேண்டும் என்ற ஸ்டெர்லிங்கின் கடப்பாடு, அவரது அணுகுமுறை, தரம் ஆகியவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எல்லாப் புகழுக்கும் அவர் தகுதியானவரே,” என்றார் பொக்கெட்டினோ.
செல்சியின் மூன்றாவது கோலை நிக்கலஸ் ஜாக்சன் அடித்தபோதும் அதிலும் ஸ்டெர்லிங்கின் பங்களிப்பு இருந்தது.
அடுத்ததாக, வரும் புதன்கிழமை நடக்கவுள்ள லீக் கிண்ண ஆட்டத்தில் செல்சி, விம்பிள்டனை எதிர்த்தாடவுள்ளது.