கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் இந்தியாவும் போட்டியை ஏற்று நடத்தும் இலங்கையும் மோதுகின்றன.
சொந்த மண்ணில், சொந்த ரசிகர்களுக்கு முன் விளையாடும் சாதகநிலை இலங்கை அணிக்கு உள்ளது.
இருப்பினும், அவ்வணியின் முக்கிய வீரர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தீக்ஷனா களக்காப்புப் பணியில் ஈடுபட்டபோது அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதன் முடிவு வெளிவந்த பின்னரே அவர் இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா என்பது தெரியவரும் என்று இலங்கை கிரிக்கெட் மன்றம் அறிவித்துள்ளது.
இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக தீக்ஷனா களமிறங்காவிடில் அது இலங்கைக்குப் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.
தீக்ஷனா விளையாடுவார் என்ற நற்செய்தி தங்கள் செவிகளை எட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இலங்கை ரசிகர்கள் பதற்றம் கலந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.