கொழும்பு: ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான சூப்பர் 4 சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிலர், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராத் கோஹ்லிக்கு வெள்ளி கிரிக்கெட் மட்டையைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
வலைப்பயிற்சியில் இந்திய அணிக்கு அந்த இலங்கைப் பந்துவீச்சாளர்கள் உதவினர். பயிற்சி முடிந்த பிறகு அவர்கள் கோஹ்லியை அணுகினர்.
மகிழ்வுடன் அவர்களை வரவேற்று, கிரிக்கெட்டில் சாதிக்க குறிப்புகளை வழங்கினார் கோஹ்லி. கிரிக்கெட் வீரருக்கான உடலுறுதி, மனநிலை, ஆட்டத்திறன், மேற்கொள்ள வேண்டிய சிறுசிறு மாற்றங்கள் போன்றவை குறித்து அவர் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்த காணொளியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது சமூக ஊடகப் பக்கங்கள் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளது.
“அனைத்துலக அளவில் ஆடுவதற்குத் தான் எப்படி மேம்படுவது என்று கேட்டதற்கு, ‘ஒரு தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரராக, உங்கள்மீது நீங்களே நம்பிக்கை வைக்க வேண்டும். நாளின் முடிவில், நீங்கள் பயிற்சியில் போடும் முயற்சிதான் உங்களுக்கான நிலையைத் தீர்மானிக்கும்’ என்று கோஹ்லி சொன்னார்,” என்று அந்த இலங்கை வீரர்களில் ஒருவர் சொன்னார்.
கோஹ்லி பயிற்சிக்கு ஆயத்தமாவதையும் அவர் பயிற்சி செய்யும் விதத்தையும் பார்ப்பதிலிருந்தே அவரிடமிருந்து பலவற்றையும் கற்றுக்கொண்டதாக அவ்வீரர் குறிப்பிட்டார்.