ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இப்போட்டியில் இந்திய அணி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் வெல்வது உறுதியாகிவிட்டது.
அரையிறுதியாட்டத்தில் தென்கொரியாவை 5-3 எனும் கோல் கணக்கில் வென்றது இந்தியா. ஹார்திக் சிங், மந்தீப் சிங், லலித் குமார் உப்பத்யை, அமித் ரொஹிதாஸ், அபிஷேக் ஆகியோர் இந்தியாவின் கோல்களைப் போட்டனர். தென்கொரியாவின் மூன்று கோல்களையும் யுங் மான்யேய் போட்டதாக ஒலிம்பிக் விளையாட்டுகளின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அடுத்த அரையிறுதியாட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது. அதில் ஜப்பானும் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் சீனாவும் மோதுகின்றன.
அந்த ஆட்டத்தின் வெற்றியாளரை இந்தியா இறுதியாட்டத்தில் சந்திக்கும்.
ஆண்கள் ஹாக்கியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றால் அது 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெறும். அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ளன.