ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இதனுடன் ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டி வரலாற்றில் நான்கு முறை தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இப்போட்டியில் இந்தியா, இரண்டாவது ஆக அதிக முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ள இரு அணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. தென்கொரியாவும் நான்கு முறை தங்கம் வென்றிருக்கிறது.
ஆக அதிக முறை தங்கம் வென்றுள்ள பாகிஸ்தான் ஒன்பது முறை வாகை சூடியிருக்கிறது.
இவ்வாண்டுப் போட்டியின் இறுதியாட்டத்தில் நடப்பு வெற்றியாளர் அணியான ஜப்பானை 5-1 எனும் கோல் கணக்கில் வென்றது இந்தியா.
ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜப்பானின் தற்காப்பு ஆட்டம் சிறப்பாக இருந்தது. 25வது நிமிடத்தில் இந்தியாவை முன்னுக்கு அனுப்பினார் மன்பிரீத் சிங்.
மன்பிரீத், ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கியமாக இருந்தவர்.
மூன்றாம் கால்பாதி ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் அணித் தலைவர் ஹமன்பிரீத் சிங் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். நான்கு நிமிடங்களுக்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது கோலைப் போட்டார் அமித் ரோகிதாஸ்.
நான்காம் கால்பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அபிஷேக் கோல் எண்ணிக்கையை 4-0ஆக ஆக்கினார்.
பின்னர் செரென் டனாக்கா ஜப்பானுக்கு ஒரு கோலைப் போட்டார். அது அவர் அணியின் ஆறுதல் கோலாக அமைந்தது.
நான்காம் கால்பாதியின் கடைசி சில நிமிடங்களில் இந்தியாவின் ஐந்தாவது கோலைப் போட்டு இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார் ஹமன்பிரீத்.
சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டுகளில் இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி மிகவும் அபாரமாக விளையாடி வெற்றிநடை போட்டிருக்கிறது. ஆசிய விளையாட்டுகளில் பொதுவாகவே இந்திய அணி இம்முறை சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.