மும்பை: வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கிரிக்கெட், பேஸ்பால்/சாஃப்ட்பால், கொடிக் காற்பந்து (ஃபிளாக் ஃபுட்பால்), லக்ராஸ், சுவர்ப்பந்து ஆகிய ஐந்து விளையாட்டுகளை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
இவ்வாரம் மும்பையில் நடக்கவிருக்கும் அனைத்துலக ஒலிம்பிக் மன்றக் செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் பட்சத்தில் அது 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்போட்டிகளில் இடம்பெறும்.
இதனிடையே, கிரிக்கெட்டை மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருவதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.
“இன்னும் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை என்றபோதும், ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைக் காண்பது குறித்த மிக முக்கியமான முடிவு,” என்றார் திரு பார்க்லே.
முன்னதாக, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தால் இறுதி செய்யப்பட்ட 28 விளையாட்டுகளில் கிரிக்கெட் இடம்பெறவில்லை.
இருப்பினும், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஒன்பது விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்ப்பது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று கடந்த ஜூலையில் அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அறிவித்திருந்தது.
முன்னதாக, ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் ஆறு அணிகள் பங்கேற்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்று ஐசிசி, லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் குழுவிடம் பரிந்துரை செய்திருந்தது.
அவ்வகையில், ஐசிசி டி20 போட்டித் தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும்.
கடைசியாக, 1900ஆம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அப்போது ஒரே ஒரு போட்டி மட்டுமே இடம்பெற்றது. அதில், கிரேட் பிரிட்டன் அணி பிரான்சைத் தோற்கடித்து, தங்கம் வென்றது.
அப்போது, இரண்டு நாள்களாக விளையாடப்பட்ட அப்போட்டியில், டெஸ்ட் போட்டியைப்போல நான்கு இன்னிங்ஸ்கள் விளையாடப்பட்டன.