சென்னை: கிரிக்கெட் போட்டிகளின்போது திடலுக்குள் புகுந்து இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரிட்டிஷ்காரர் ஒருவர் சென்னையிலும் தனது சேட்டையைக் காட்டி பரபரப்பைக் கிளப்பினார்.
ஜார்வோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் டேனியல் ஜார்விஸ், சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பொருதிய உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்பட்டார்.
இந்திய அணி பந்துவீசியபோது ஜார்வோ திடீரென திடலுக்குள் புகுந்தார். விராத் கோஹ்லியிடம் அவர் ஏதோ சொன்னதுபோலத் தெரிந்தது. பாதுகாவலர்கள் ஓடிவந்து அவரைப் பிடித்துச் சென்றனர். அப்போது, கோஹ்லியும் ஓடி வந்து அவரிடம் ஏதோ காட்டமாகக் கூறியது காணொளியில் தெரிந்தது.
ஜார்வோ இந்திய அணிச் சீருடையை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, எஞ்சியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளை அவர் நேரில் சென்று காண முடியாதபடி அனைத்துலக கிரிக்கெட் மன்றம் அவருக்குத் தடை விதித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, லண்டன் ஓவல் திடலில் நடந்த டெஸ்ட் போட்டியின்போதும் ஜார்வோ திடலுக்குள் புகுந்து தன் வேலைகளைக் காட்டினார்.