பெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘டிஎல்எஸ்’ முறைப்படி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
முதலில் பந்தடித்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ஓட்டங்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா 108 ஓட்டங்கள் எடுத்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 95 ஓட்டங்கள் குவித்தார்.
இலக்கை அதிரடியாக விரட்டியது பாகிஸ்தான். ஆட்டத்தில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் விளையாட்டில் தடை ஏற்பட்டது.
மழை நின்ற பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. பக்ஹர் ஜமான் 81 பந்துகளில் 126 ஓட்டங்கள் விளாசினார். இந்நிலையில் மீண்டும் மழை வந்ததால் பாகிஸ்தான் ‘டிஎல்எஸ்’ முறைப்படி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புக்கு உயிர் வந்துள்ளது. அதே நேரம் தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலில் உள்ளது.