பாரிஸ்/மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 10) நடைபெற்ற காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) குழுவை 3-2 எனும் கோல் கணக்கில் பார்சிலோனா வீழ்த்தியது.
பிரேசில் தாக்குதல் ஆட்டக்காரர் ரஃபின்யா இரு கோல்களைப் போட்டு ஐந்து முறை ஐரோப்பிய வெற்றியாளரான பார்சிலோனாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
முதல் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்துக்காக காத்திருக்கும் பிஎஸ்ஜி குழு, ஒரு கட்டத்தில் ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால், ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டு ஆட்டத்தை சமன் செய்தார் ரஃபின்யா.
ஆட்டம் முடிவடைய 13 நிமிடங்கள் இருந்த நிலையில், பார்சிலோனாவின் ஆன்ட்ரியே கிறிஸ்டென்சன் தலையால் முட்டி கோல் போட்டு அக்குழுவின் வெற்றியை உறுதிசெய்தார்.
புதன்கிழமை நடந்த மற்றொரு காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் பொருஷியா டோர்ட்மண்ட் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைய முனைப்பு காட்டும் அட்லெட்டிகோ குழு, ஆட்டத்தின் முற்பாதியில் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆனால், ஆட்டத்தின் பிற்பாதியில் அக்குழுவிற்கு டோர்ட்மண்ட் நெருக்குதல் அளித்தது. 81வது நிமிடத்தில் டோர்ட்மண்டின் செபாஸ்டியன் ஹாலர் பந்தை அட்லெட்டிகோ வலைக்குள் புகுத்தியதால் கோல் கணக்கு 2-1 ஆனது. அதைத் தொடர்ந்து டோர்ட்மண்டின் தாக்குதல் வேட்டையை ஒருவழியாக சமாளித்த அட்லெட்டிகோ, கடைசிவரை முன்னிலையைக் கட்டிக்காத்தது.