வேலூர்: காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை அளிக்க வேண்டும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியை செய்யத் தவறியதால்தான் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா ஏன் தீர்ப்பாயத்துக்குச் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரைக் கேட்கிறோம்.
“கிட்டத்தட்ட 50 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. போதுமான தண்ணீர் இல்லாமல் தவிக்க நேரிடுவதாக கர்நாடக அரசு ஒரு காரணத்தைச் சொல்கிறது. அப்படியெனில், தண்ணீரை எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை காவிரி மேலாண்மைக் குழு முன்பே முடிவு செய்திருக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் துரைமுருகன்.
ஆனால், அக்குழு அப்பணியைச் செய்யவில்லை என்று சாடிய அவர், கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளில் ஒருமுறைகூட மேகதாது என்ற வார்த்தையை கர்நாடகா பயன்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
உச்ச நீதிமன்றத்திலும் கர்நாடக அரசு மேகதாது என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றும் இன்று மேகதாது குறித்து தொடர்ந்து பேசி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.