பெங்களூரு: நிலவில் லேண்டரை வெற்றிகரமாகத் தரையிறக்கியதுதான் தமது பணியில் மறக்க முடியாத தருணம் என ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவால் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) இந்தியாவுக்கு அனைத்துலக வெளியில் பெரும் பெயரும் பாராட்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் என்னென்ன கனிமங்கள் காணப்படுகின்றன, மண் பாறைகளின் தன்மை எப்படிப்பட்டது என்பது குறித்தெல்லாம் எதிர்காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட சந்திரயான் திட்டம் கைகொடுக்கும் என்றும் பெங்களூரில் பைலாலு என்ற பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டெனா மூலம் சந்திரயான்-3 விண்கலத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது என்றும் வீரமுத்துவேல் கூறியுள்ளார்.
“எனினும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள இந்த ஏற்பாடு மட்டும் போதாது. எனவே தொலைத்தொடர்புக்காக மூன்று அனைத்துலக விண்வெளி மையங்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டது. மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ தனித்து மேற்கொண்டது. இதற்கான கருவிகள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது பெருமைக்குரிய விஷயம்.
“எனக்கும் இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட மேலும் பலருக்கும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் பாராட்டுக் கடிதங்களை அனுப்பி உள்ளனர். குவிந்த கடிதங்களைப் பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது. எதிர்காலத்தில் இந்த மாணவர்களில் சிலரும்கூட இஸ்ரோவுக்காக பணியாற்றக்கூடும்,” என்று வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்துகொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் எதிலும் முழு ஈடுபாட்டுடனும் விடா முயற்சியுடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.