சென்னை: கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் தமிழகத்தில் உடல் உறுப்பு நன்கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐந்து வாரங்களில் மட்டும் 2,700க்கும் அதிகமானோர் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கண்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம் உள்ளிட்ட உறுப்புகளைத் தானமாகப் பெற முடியும். இதன் மூலம் பன்னிரண்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.
இந்நிலையில், இறக்கும் முன்பு உறுப்பு நன்கொடைக்கு பதிவு செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்தே உடல் உறுப்பு நன்கொடைக்கான விருப்பப் பதிவுகள் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக மாதந்தோறும் உடல் உறுப்பு தானம் தொடர்பாக நூறு விருப்பங்கள் மட்டுமே பதிவாகும். ஆனால், கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் 2,700 விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன என்று கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.