பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் இந்தியாவின் முயற்சிகளை விளக்கும் முழக்கவரிகளைக் கொண்ட விளம்பர பதாகைகளும் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வண்ணமிகு ஓவியங்களும் இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் சாலை ஓரங்களை அலங்கரிக்க, துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் வரிசையில் நின்றபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஜி20 உச்சநிலை மாநாடு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிக்காட்டும் வகையில் எல்லா மாநிலங்களின் அம்சங்களும் வெவ்வேறு வகையில் பிரதிபலிக்கின்றன.
சனிக்கிழமை நடைபெறும் தலைவர்களின் அதிகாரபூர்வ இரவு விருந்தில் கிட்டத்தட்ட 500 வகை உணவுகள் தயாராகிறது என்றும் முற்றிலும் சைவ உணவு வகைகள் என்றும் அறியப்படுகிறது.
அனைத்து வேளை உணவுகளிலும் தினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ள நிலையில் தினை தாலி, தினை புலாவ், தினை இட்லி, தினை சூப் போன்ற உணவுகள் பரிமாறப்பட இருக்கின்றன. ராகி இட்லி, தென் இந்திய மசாலா தோசை, ராஜஸ்தானின் தால்பாடி சுர்மா, பீகாரின் லிட்டி சோக்கா, பெங்காலி ரசகுல்லா போன்றவை சமைக்கப்பட உள்ளன. மேலும் இந்தியாவின் பிரபல சாலையோர உணவு வகைகளான பானிபூரி, சட்பதி சாட், தஹிபல்லா, சமோசா, பிரட் பகோரா, பேல்பூரி, வடபாவ் போன்ற உணவுகளும் மாநாட்டில் இடம்பெறுகின்றன. தலைவர்களுக்கு தங்கத்தட்டில் உணவுப் பொருள்கள் பரிமாறப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநிலை மாநாட்டின் கூட்டங்கள் நடைபெறும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தின் நுழைவாயிலில் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பிரம்மாண்ட 27 அடி உயர நடராஜர் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கலாசாரத்தைப் பறைசாற்றும் ஏராளமான சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. வீதிகள் சுத்தம் செய்யப்பட்டு பூங்காவனம் போல கூட்டம் நடைபெறும் இடங்கள் காட்சியளிக்கின்றன.
இதற்கிடையில் புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுவரை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அதனால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பிரமுகர்களும் அதிகாரிகளும் கடந்த சில நாள்களாக புதுடெல்லி வந்திறங்கிய நிலையிலும் சாலைகள் எந்த நெரிசலும் இல்லாமல் சீரான முறையில் இயங்கி வருகிறது.
கிட்டத்தட்ட 3,500 வெளிநாட்டு செய்தியாளர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
தெற்கு ஆசிய நாடு ஜி20 மாநாட்டை ஏற்று நடத்துவது இதுவே முதன்முறை. கடந்த ஆண்டு இந்தோனீசியாவிடமிருந்து தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்ட இந்தியா அடுத்ததாக பிரேசிலிடம் வழங்கவுள்ளது. சுழற்சி முறையில் தலைமைத்துவம் மாறும் நிலையில் தொடர்ந்து மூன்று தலைமை நாடுகளும் உலகின் தெற்கு நாடுகளாகும். ‘குளோபல் சவுத்’ எனும் உலகின் தெற்கு நாடுகளின் முக்கியத்துவமும் அதன் எதிர்கால எழுச்சியையும் இந்த உச்சநிலை மாநாடு வலியுறுத்திவருகிறது.