பெய்ஜிங்: சீனாவில் குறைந்தது நான்கு மருத்துவமனைகளைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அல்லது அவர்கள் குற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த மருத்துவமனைகள் பொய்யான தனிப்பட்ட விவரங்களைக் கொண்ட பிறப்புச் சான்றிழ்களை விற்பதாகச் செய்யப்பட்ட புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தனர்.
ஆட்கடத்தல் செய்யப்பட்ட குழந்தைகளின் உண்மையான அடையாளங்களை மறைக்க, அந்தப் பிறப்புச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஷாங்சியூ மகப்பேறு, குழந்தை சுகாதார மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று முன்னாள் துறைத்தலைவர்களுக்கு நான்கிலிருந்து எட்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 2,659 பிறப்புச் சான்றிதழ்களை விற்றதாக அவர்கள் மூவர்மீதும் சுமத்தப்பட்ட குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. அந்தப் பிறப்புச் சான்றிதழ்கள் நாடு முழுதும் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ஹூபெய், குவாங்ஸி, குவாங்டொங் மாநிலங்களில் உள்ள மூன்று மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அதேபோன்ற நடவடிக்கைகளுக்காக காவல்துறைக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.