தோக்கியோ: நீண்ட தொலைவு பாயும் 440 டொமஹாக் ஏவுகணைகளை வாங்க அமெரிக்காவுடன் ஜப்பான் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
வட்டாரத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக, தனது ராணுவ வலிமையை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் வியாழக்கிழமை (ஜனவரி 18) இந்த உடன்பாட்டைச் செய்துகொண்டது.
டொமஹாக் ஏவுகணைகள் 1,600 கிலோமீட்டர் தொலைவிற்குப் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்டது. 2.35 பில்லியன் அமெரிக்க டாலர் (3.16 பில்லியன் வெள்ளி) அளவிற்கு, இருவகை டொமஹாக் ஏவுகணைகளையும் விற்க, கடந்த நவம்பரில் அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது.
வரும் 2027ஆம் ஆண்டிற்குள், தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு விழுக்காட்டைத் தற்காப்பிற்குச் செலவிட ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அவ்வகையில், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் சாதனை அளவாக தற்காப்பிற்கு 56 பில்லியன் அமெரிக்க டாலரை ஜப்பான் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், தற்காப்பை வலுப்படுத்த ஜப்பான் எடுத்துவரும் நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
முன்னதாக, தன் நாட்டில் தயாரிக்கப்படும் பேட்ரியாட் ஏவுகணைகளை விற்பதற்கு ஏதுவாக கடந்த டிசம்பரில் ஜப்பான் தனது ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.