ஹாங்காங்: கொவிட்-19 தொற்று நோயாளிகள் இனி தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று ஹாங்காங் அறிவித்துள்ளது. இம்மாதம் 30ஆம் தேதி முதல் இந்த விதித் தளர்வு நடப்பிற்கு வரும்.
முன்னதாக, கொவிட்-19 தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை அகற்றுவதாக கடந்த 8ஆம் தேதி சீனா அறிவித்திருந்தது. அதையொட்டி, ஹாங்காங்கும் இப்போது அத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“இயல்புநிலை திரும்ப வேண்டுமெனில் கொவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை அகற்றுவது முக்கியம்,” என்று ஹாங்காங் நகரத் தலைவர் ஜான் லீ தெரிவித்தார்.
எனினும், அங்கு கட்டாய முகக்கவச விதி மட்டும் தொடர்ந்து நீடிக்கும். உடற்பயிற்சி செய்யும்போது மட்டும் முகக்கவசம் அணிய தேவையில்லை.
இருப்பினும், வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கட்டாய முகக்கவச விதியையும் முடிவிற்குக் கொண்டுவர ஹாங்காங் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது என்று ‘மிங் பாவ்’ சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.