ஜெருசலம்: ஹமாஸ் போராளிகள், காஸாவில் பிடித்து வைத்திருந்த மேலும் 17 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளனர். அவர்களில் நான்கு வயது அமெரிக்க சிறுமியும் ஒருவர்.
சண்டை நிறுத்தத்தின் 3வது நாளான நவம்பர் 26ஆம் தேதி இஸ்ரேலும் அதிகமான சிறைக்கைதிகளை விடுவிப்பதைக் காண முடிந்தது.
காஸாவிலிருந்து 17 பிணைக் கைதிகள் வெற்றிகரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டது. பதின்மூன்று இஸ்ரேலியர்கள், மூன்று தாய்லாந்து நாட்டவர்கள், ஒரு ரஷ்ய குடிமகன் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸ் கூறியது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலைத் தொடுத்த ஹமாஸ் 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.
இவர்களை விடுவிப்பதற்காக கத்தார் மேற்கொண்ட முயற்சியில் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நான்கு நாள் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
ஹமாஸ் விடுவிக்கும் ஐம்பது பிணைக் கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட 150 பாலஸ்தீனர்களையும் விடுவிக்க வேண்டும் என்று சண்டை நிறுத்த ஒப்பந்தம் சொல்கிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் விடுவிக்கும் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டால் போர் நிறுத்தத்தை நீடிக்க விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் பைடன், சிறைக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை சண்டை நிறுத்தம் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிக அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்தபோது தன்னுடைய பெற்றோரை ஹமாஸ் போராளிகள் கொன்றதை நேரில் பார்த்ததாக நான்கு வயது பிணைக் கைதியான அபிகெய்ல் எடன் கூறியிருப்பதாக திரு பைடன் தெரிவித்தார்.
“இது, நான்கு வயது சிறுமி எண்ணிப்பார்க்க முடியாத செயல்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது அபிகெய்ல் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ராய்ட்டர்ஸிடம் பேசிய அவரது தாத்தாவான கார்மல் எடன், அவள் திரும்பி வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. இதற்கு உதவிய திரு பைடனுக்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் தற்காலிகப் போர் நிறுத்தம் திங்கட்கிழமையுடன் முடிவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தப்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை மீண்டும் போர் தொடருமா அல்லது நிறுத்தி வைக்கப்படுமா என்பது குறித்து நேற்று காலை வரை தகவல் இல்லை.