ஜோகூர் பாரு: கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறைக் காலம் ஆகியவற்றை முன்னிட்டு ஜோகூரில் வர்த்தகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நலிவடைந்த நிலையில் ஜோகூர் பாருவிற்குச் செல்வதில் சிங்கப்பூரர்கள் ஆர்வம் காட்டுவதாக தெற்கு ஜோகூர் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் ஆலோசகர் டே கீ சின் கூறினார்.
“சிங்கப்பூரர்கள் பலரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் பொருள்கள் வாங்க ஜோகூர் பாருவுக்கு வருவார்கள். சிலர் பண்டிகையைக் கொண்டாடக்கூட இங்கு வருவதுண்டு,” என்றார் அவர்.
“சிங்கப்பூரர்கள் மட்டுமன்றி, சிங்கப்பூரில் வேலை பார்க்கும் சீன நாட்டவர்கள், சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்க வந்துள்ள சீன நாட்டவர்கள் போன்றோரும் ஜோகூருக்கு வர விரும்புவர்,” என்று குறிப்பிட்ட அவர் மலேசியாவின் விசா நடைமுறை தளர்த்தப்பட்டதைச் சுட்டினார்.
சில்லறை விற்பனை, உணவு, பானத் துறை, சேவைத் துறை, சுற்றுப்பயணத் துறை போன்றவை அதிகம் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் திரு டே கூறினார்.
“செலவுசெய்ய இயலும் நிலையில் அத்தகையோர் இருப்பதால், தற்போதைய நிலைமையைச் சாதகமாக்கிக்கொண்டு மலேசியாவின் பொருளியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும்,” என்றார் அவர்.
இவ்வேளையில், லோட்டஸ் டெசாரு ஓய்வு விடுதியில் முன்பதிவு படிப்படியாக அதிகரித்து வருவதாக அதன் தலைமை நிர்வாகி இந்திரா காந்தி பிள்ளை கூறினார்.
பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் அதிகமான வருகையாளர்களை வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.