செமராங்: இந்தோனீசியக் காவல்துறை, இறைச்சிக்காகக் கொல்லப்படவிருந்த 200க்கு மேற்பட்ட நாய்களை மீட்டுள்ளது.
கால்களும் வாயும் கட்டப்பட்ட நிலையில் அந்த நாய்கள் லாரி ஒன்றில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்தோனீசியாவில் நாய் இறைச்சியை உண்பதற்கு எதிராகப் போராடும் ஆர்வலர்கள், காவல்துறையின் மீட்பு நடவடிக்கையைத் தங்கள் வெற்றியாகக் கருதுகின்றனர்.
ஜனவரி 6ஆம் தேதி இரவு, ஜாவா தீவிலுள்ள செமராங் நகரில் அந்த லாரி தடுத்து நிறுத்தப்பட்டது. துன்புறுத்தப்பட்ட 226 நாய்கள் அந்த லாரியில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதையடுத்து, லாரியில் சென்ற ஐவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது விலங்குநலச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
உலகில் நாய், பூனை இறைச்சி விற்பனையை அனுமதிக்கும் வெகு சில நாடுகளில் இந்தோனீசியாவும் அடங்கும். ஆனால் அங்கு இதற்கு எதிரான பிரசார இயக்கம் வலுப்பெற்று வருகிறது. அண்மை ஆண்டுகளில் செமராங் உள்ளிட்ட சில நகரங்கள் இத்தகைய இறைச்சி விற்பனைக்கு உள்ளூர் அளவில் தடை விதித்துள்ளன.